அடுத்த ஆண்டு வர இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் ஒன்றிணையும் முனைப்பில் உள்ளனர். இதற்கு அடித்தளமாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மற்ற மாநில தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் எதிர்கட்சிகளின் பலத்தை காண்பிக்க ராகுல் காந்தி, மம்தா பேனர்ஜி உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், வரும் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்கொள்ள மாயாவதியுடன் கூட்டணி வைப்பதாகவும் அகிலேஷ் யாதவ் அதிரடி முடிவை அறிவித்தார். இதனால், பாஜகவுக்கு எதிர் என்ற நிலையை எதிர்கட்சிகள் எடுத்துள்ளது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில்,
"எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவு இல்லை. மாநிலத்தில் எக்ஸ்பிரஸ்வே மற்றும் மெட்ரோ கொண்டுவர வேண்டும் என்ற கனவுகளோடு நின்று கொள்கிறேன். மத்தியில் எதிர்கட்சிகள் தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்று எனது கட்சி நிர்வாகிகளிடம் கூறிவிட்டேன். நான் பிரதமராகமாட்டேன், இருப்பினும் எதிர்கட்சிகள் மத்தியில் ஆட்சி பிடிக்க அனைவரும் மனமார்ந்து உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.
தேர்லுக்கு பிறகு நாங்கள் புதிய பிரதமரை தேர்வு செய்வோம். கூட்டணிக்கான வியூகங்கள் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அது வெளியிடப்படாது. கைரானா மக்களவை இடைத்தேர்தல் மற்றும் மற்ற இடைத்தேர்தல்கள் எங்களுக்கு வெற்றியை தந்துள்ளது. அதனால், அது தொடரும். ஊடகங்கள் எது கூறினாலும் எங்களுக்கு கவலை இல்லை.
காங்கிரஸ் அழைத்துள்ள இப்தார் விருந்தில் நான் பங்கேற்கவில்லை. ஆனால், என் சார்பாக கட்சியில் இருந்து வேறு யாராவது பங்கேற்பார்கள்" என்றார்.