2018-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. வருடம்தோறும் 3 லட்சம் பேர் அமர்நாத்துக்கு வருகை தருகின்றனர்.
அதற்காக காஷ்மீர் அரசு எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுமட்டுமின்றி, மத்திய, மாநில உளவுத் துறை, மத்திய ஆயுதப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். இவர் ஏற்கனவே கடந்த வாரம் நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்திரிகள் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர். அதனால், இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன.