முடிவின் ஆரம்பம் துவங்கியது: பாஜக பின்னடைவு குறித்து மம்தா பானர்ஜி ட்வீட்

உத்தரப்பிரதேச, பிகார் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக-வை விமர்சிக்கும் விதமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
முடிவின் ஆரம்பம் துவங்கியது: பாஜக பின்னடைவு குறித்து மம்தா பானர்ஜி ட்வீட்

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களவை தொகுதிகளிலும் சமாஜவாதி முன்னிலை வகிக்கிறது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல பிகாரில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது ஒரு மிகச் சிறந்த வெற்றியாகும். அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு முடிவின் ஆரம்பம் துவங்கிவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.

இதில், சமீபத்தில் நடந்து முடிந்த 3 மாநில பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக, இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் போன்றோர் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com