புது தில்லி: இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த குற்றச்சாட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் லாதூர் மாவட்டம் ரன்பூரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். இவர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக இவரது நடவடிக்கைகளில் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவரை கடந்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் மிர்சா பைசல் என்பவரிடம், இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மற்றும் சாலைகள் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தனது மொபைல் போல் மற்றும் பேஸ்புக் மெஞ்சர் மூலம் ரியாசுதீன் தெரிவித்துள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதைத்த தொடர்ந்து எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளின் புகாரின் பேரில், மம்தாத் நகர் போலீசார் ஷேக் ரியாசுதீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது அவர் மீது அலுவலக ரகசிய சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.