புது தில்லி: பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வரிவருவாயை உயர்த்தவும் எடுக்கப்பட்டதே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இன்று நவம்பர் 8ம் தேதி. இதே தேதியில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு என்ற ஒரு வார்த்தையை பிரதமர் மோடி நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை 3.8 கோடியில் (மே 2014) இருந்து தற்போது 6.86 கோடியாக உயர்த்தியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், வருவாயைக் கூட்டவும், ஏழைகளுக்கு அதிக சேவைகள் கிடைக்கவும், சிறந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும், இந்திய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக்கவும் முடிந்தது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.15,41 லட்சம் கோடி மதிப்புள்ள 500,1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீத நோட்டுகள் ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ரூ.10,720 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்பது தெரிய வருகிறது.