லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சிறுவன் ஒருவன், 3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து வெடித்ததில், படுகாயமடைந்த சிறுமிக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளது.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது குரல் பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
மிலக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து சிறுமியின் தந்தை ஷஷி குமார் அளித்த புகாரில், விளையாடச் சென்ற தனது மகளின் வாயில், ஒரு பையன் அதிக சக்தி வாய்ந்த பட்டாசை வைத்து வெடித்ததில், அவள் படுகாயம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.