கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியின் நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரியை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்புமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 12-ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியும் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் ரூ.13,000 கோடிக்கும் மேல் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அமைப்புகள், இருவருக்கும் எதிராக 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
இந்த நிலையில், சோக்ஸியின் நிறுவனத்தில் பணியாற்றிய தீபக் குல்கர்னி என்பவரை போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள சோக்ஸிக்கு அவர் உதவியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். குல்கர்னியை காவலில் எடுத்து விசாரிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அப்போது அமலாக்கத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, வரும் 12-ஆம் தேதி வரை அவரை
அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.