"போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்களில் இருக்கும் சென்சார் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய தனியார் விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம் கடந்த மாதம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 180 பேரும் பலியாகினர். இந்த விபத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அமைப்பு (எஃப்.ஏ.ஏ.), போயிங் நிறுவனம் ஆகியன தனித்தனியாக கடந்த 6, 7ஆம் தேதிகளில் அறிவிப்புகளை வெளியிட்டன. அந்த அறிவிப்புகளில், சென்சார் தொடர்பான பிரச்னைகளுக்கும், விமான வேகம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களிடம் போயிங் 737 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்கள் உள்ளன. மேலும் 400 விமானங்களை வாங்கவும் அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, எஃப்.ஏ.ஏ., போயிங் நிறுவனம் ஆகியவற்றின் அறிவிப்புகளை மேற்கோள்காட்டி, சென்சார் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும்படி, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றுக்கு டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது.