புது தில்லி: ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி உபரி நிதி கோரவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியை நிர்வகிக்கும் பொறுப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்த போதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.
இதன் காரணமாக ஏற்கனவே மறைமுகமாக இருந்த உரசல் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியில் செயல்பாடுகளில் தலையிடுவதாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதே கருத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் வலியுறுத்தியிருந்தார்.
ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்குவது ஒரு நடைமுறையாகும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால் நிதி பற்றாக்குறையில் இருக்கும் மத்திய அரசானது, ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற மத்தியஅரசு முயற்சித்து வருகிறது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி உபரி நிதி கோரவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளியன்று வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ஊடகங்களில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி குறித்து ஏராளமான செய்திகள் யூகத்தின் அடிப்படையில் வலம் வருகின்றன. ஆனால் மத்திய அரசின் நிதிக் கணக்கீடுகள் அனைத்தும் முழுமையாகக் கண்காணிப்பில் உள்ளன. எனவே ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடியோ அல்லது ரூ. ஒரு லட்சம் கோடியோ மத்திய அரசு சார்பில் கோரபடவில்லை.
அவ்வாறு வெளிவரும் செய்திகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் செய்யப்படுபவை. ரிசர்வ் வங்கியுடன் முதலீடு உருவாக்கம் தொடர்பாக மட்டுமே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வேறு எந்த விதமான ஆலோசனைகளும், கோரிக்கைகளையும் வைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.