லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் புகை பிடித்ததை தட்டிக்கேட்ட கர்ப்பிணி ஷீனாத்தேவி(45) கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிகார் செல்லும் ஜாலியன்வாலா விரைவு ரயிலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் ரயில் நிலையத்தை நெருங்கியபோது பயணி ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஆனால் அந்த பெட்டியில் குடும்பத்துடன் பயணம் செய்த கர்ப்பிணி ஷீனாத்தேவி அந்த பயணியை புகை பிடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, கர்ப்பிணி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஷாஜகான்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சக பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஷாஜகான்பூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ஏ.கே பாண்டே கூறுகையில், கர்ப்பிணி ஷீனாத்தேவி கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சோனு யாதவ் என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரில் சாத் பூஜை கொண்டாடுவதற்காக சென்றபோது நிகழ்ந்துள்ளதாக இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.