பெங்களூரு: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிதி நிறுனம் ஒன்றுக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற, அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று ஆஜரானார்.
அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்திய போலீசார், ஞாயிறு பிற்பகல் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி முன்னர் மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஜனார்தன் ரெட்டியை 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.