புது தில்லி: ஹரியாணாவில் பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி உண்டாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் குண்ட்லி - மனேசர் - பல்வால் (கே.எம்.பி) எக்ஸ்பிரஸ் வேயினை பிரதமர் மோடி மற்றும் ஹரியாணா முதல்வர் மனோஹர் லால் கட்டார் இருவரும் ஞாயிறன்று திறந்து வைத்தனர். முழுமையாக நிறைவேறாத நிலையில் இந்த சாலையினைத் திறந்து வைத்து விட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி உண்டாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் வெளியிட்டுள்ள தகவலானது வருமாறு:
முழுமையடையாத கே.எம்.பி எக்ஸ்பிரஸ் வேயினை சட்டத்துக்கு புறம்பாகவும் வலுக்கட்டாயமாகவும் திறந்து வைத்ததன் மூலமாக, பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடியம், ஹரியாணா முதல்வர் மனோஹர் லால் கட்டாரும் உருவாக்கியுள்ளனர்.
கே.எம்.பி எக்ஸ்பிரஸ் வே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன்பாக, ஏன் முறையான பொறியாளர்கள் மூலமாக சோதனைகளை நடத்தப்படவில்லை என்பது தெரிய வேண்டும்.
சாலை கட்டுமான ஆலோசனைக்காக மாநில அரசால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆலோசகரான நிறுவனம் கூட, சாலை கட்டுமானத்திற்காக "நிறைவுச் சான்றிதழ்" வழங்கவில்லை. மேலும் ஹரியாணா மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்ற கழகமும், கட்டுமானத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்க இயலாது என்று மறுத்து விட்டது.
தேர்தல் சமயத்தில் ஒரு திடீர் விளம்பரத்திற்காகவும், தனியார் நிறுவனம் ஒன்று பயன் பெறுவதற்காகவும், பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடியும் முதல்வர் கட்டாரும் உண்டாக்கியுள்ளார்களா?
இவ்வாறு அவர் தெரிவித்துளார்.