அமிர்தசரஸ்: பஞ்சாபில் நிராங்காரி சாமியார் ஆசிரமத்தில் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஆதிவால் கிராமத்தில் நிராங்காரி என்னும் சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 18 ம் தேதி, 200-க்கும் மேற்பட்ட மக்கள், பிரார்த்தனைக்காக கூடியிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆசிரம வளாகத்துக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கு கையெறி குண்டை வீசி விட்டு அவர்கள் தப்பியோடினர். அந்த குண்டு வெடித்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த, 10 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கையெறி குண்டை வீசிய ஒரு நபரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக புதனன்று முதல்வர் அம்ரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
கையெறி குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வீசப்பட்ட குண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை குண்டுகள்தான் காஷ்மீரிலும் ராணுவத்தினர் மீது வீசப்படுகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். வெகுவிரைவில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்படுவான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.