புது தில்லி: பாகிஸ்தான் உத்தரவால் உருவான காஷ்மீரின் புதிய கூட்டணி என்ற பாஜக தலைவரின் கருத்தால், ட்விட்டரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை பாஜக திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டகால் சட்டபேரவை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை அமைக்க வியாழன் மாலை உரிமை கோரியது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக மாநில ஆளுநர் வியாழன் இரவு திடீரென அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் உத்தரவால் உருவான காஷ்மீரின் புதிய கூட்டணி என்ற பாஜக தலைவர் ராம் மாதவ்வின் கருத்தால், ட்விட்டரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் பாரதிய ஜனதாவின் தேசிய செயலரான ராம் மாதவ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா இருவருக்கும் இடையே ட்விட்டரில் நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:
ராம் மாதவ்
எல்லையைத் தாண்டி இருந்து பெற்ற உத்தரவின் காரணமாகவே மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இரண்டும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தது. அதே போன்று புதியதாக கூட்டணி ஆட்சி அமைக்கவும் கூட பாகிஸ்தானில் இருந்து உத்தரவை பெற்று இருக்கலாம். அவர்களுடைய நகர்வுதான் தற்போது ஆளுநரை இந்த முழு விவகாரத்தையும் கவனிக்கத் தூண்டியுள்ளது.
ஒமர் அப்துல்லா:
உங்களுடைய குற்றச்சாட்டை முதலில் நிரூபியுங்கள் என்று சவால் விடுக்கிறேன். ரா உளவுப்பிரிவு, தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் உளவுத்துறை பிரிவு உங்களிடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. (சிபிஐயும் உங்கள் சொல்பேச்சு கேட்கும் கிளிதான்) எனவே பொதுதளத்தில் ஆதாரங்களை வைப்பதற்கான தைரியம் உங்களுக்கு வேண்டும். ஒன்று குற்றச்சாட்டை நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள். துப்பாக்கி சூடு மற்றும் அரசியல் சூட்டை ஒருசேர நடத்த வேண்டாம்.
ராம் மாதவ்
நான் உங்களுடைய தேசப்பக்தி தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சிக்கு திடீரென மக்கள் ஜனநாயக கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது அரசியல் தளத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மற்றபடி உங்களை அவமதிக்கவில்லை. (அத்துடன் அவர் நகைச்சுவைத்தன்மையினை காட்டும் பொருட்டு ஸ்மைலி எமோட்டிகான் ஒன்றையும் ட்வீட்டில் சேர்த்திருந்தார்.)
உமர் அப்துல்லா
தவறான முயற்சிகள் நகைச்சுவையில் வேலை செய்யாது. எங்களுடைய கட்சி பாகிஸ்தானின் சார்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். அதனை நிரூபிக்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். பாகிஸ்தான் உத்தரவின் பெயரில்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்தோம் என்ற உங்களுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். இது உங்களுக்கும் உங்களுடைய அரசுக்கும் வெளிப்படையான சவாலாகும்.
இரண்டு தலைவர்களிடையே நடைபெற்ற இந்த வார்த்தைப் போர் ட்விட்டரில் கவனத்திற்குள்ளானது.