புது தில்லி: மத்தியப் பிரதேசம், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி அன்புக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் இன்று நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவில் அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களித்து, மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவை நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மிசோம் மாநிலத்தில் வாழும் சகோதர, சகோதரிகளே, இளம் வாக்காளர்களே, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி ஒட்டுமொத்த வாக்குப்பதிவை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.
மத்தியப் பிரதேசத்துக்கு 230 தொகுதிகளுக்கும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2003ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் பாஜக, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் நிலையில், மிசோரமில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது.