புது தில்லி: தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், 'ஸ்டெர்லைட்' வேதாந்தா குழுமம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு முன்பு மத்திய அரசு திட்டமிட்டு பணிகளைத் துவக்கியது. ஆனால் அதற்கு பொதுமக்களிடம் எழுந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், 'ஸ்டெர்லைட்' வேதாந்தா குழுமம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் தில்லியில் திங்களன்று கையெழுத்தானது. இதில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த மூன்று இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முறையான ஒப்பந்தமானது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தில்லியில் திங்களன்று கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் 'ஸ்டெர்லைட்' வேதாந்தா குழும நிறுவனரான அனில் அகர்வால் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.