மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் அந்த வங்கியிலிருந்து விலகியுள்ளார்.
வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் அளிக்க உதவி செய்து, அதற்கு பிரதிபலனாக ஆதாயம் பெற்றதாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயலதிகாரியுமான சந்தா கோச்சார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணை நடைபெறுவதால், சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இதனிடையே ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக மீண்டும் தேர்வாக விரும்புவதாக சந்தா கோச்சார் தெரிவித்திருந்தார். பின்னர் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் 80 சதவீத பங்குகளை கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கி, விதிப்படி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சாரை மீண்டும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசாரணை நிலுவையில் இருப்பினும், நிர்வாக குழு இயக்குநர் பதவி காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக சந்தா கோச்சாரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி வட்டாரங்கள் தெரிவித்திருந்த. ஐசிஐசிஐ வங்கியுடனான சந்தா கோச்சாரின் பணி ஒப்பந்தம், வரும் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைவதாக இருந்தது.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் அந்த வங்கியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தில் இருந்து தன்னை முன்னதாக விடுவிக்குமாறு சந்தா கோச்சார் விடுத்த வேண்டுகோளை, ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர்கள் குழுவானது ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.