புது தில்லி: பெட்ரோல் டீசலுக்கு தினசரி விலை நிர்ணய முறையில் மாற்றமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்களன்று ஆற்றல் பயன்பாடு தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு சமீபமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்துள்ளது. அதே சமயம் பொதுத்துறை நிறுவனங்கள் எரிபொருளுக்கு மானியங்களை அளிக்கின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது நானகு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பீப்பாய்க்கு 85 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் அதிகரித்துக் காணப்படுவது நமக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இதன் காரணமாகவே விலையினை அரசுகு றைத்த போதும், தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.
எண்னெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக்' இம்மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியினை நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிப்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அலி பாலிஹ்-உடன் நான் பேசியிருக்கேன்.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் குறைந்து வரும் ரூபாய் மதிப்பு இரண்டும் சேர்ந்து இறக்குமதிக்கான செலவை கடுமையாக அதிகரித்துள்ளன.
வாடிக்கையாளர்களின் நிலையினை புரிந்து கொண்டதால்தான் மத்திய அரசானது, அவர்களுக்கு நிம்மதியளிக்கும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையினைக் குறைக்கும் நடவடிக்கையினை எடுத்தது.
இது பெட்ரோல், டீசல் விலைக்கான தினசரி விலை நிர்ணய முறையில் இருந்து பின்வாங்குவது கிடையாது . அவை எப்போதும் போல தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.