புது தில்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது திங்களன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கையை கோரியது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவி செய்ய மத்திய அரசின் உயர்மட்ட குழு ஜெய்பூரில் உள்ளது. நிலையை தொடர்ந்து கண்காணிக்க தேசிய நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தால் தனிப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. நிலையை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. கவலைப்படத் தேவையில்லை.
ஜெய்பூரில் கொசுக்களின் மாதிரியும் சோதனை செய்யப்படுகிறது, சோதனைக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை மேற்கொள்ளவும் மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் கர்ப்பமான பெண்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சல் போன்று ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அறிகுறியும் காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.