சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள மீ டூ மூவ்மெண்ட் தவறான முன்னுதாரணமாகும் என்று வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் குரலாக இணையதளத்தில் மீ டூ என்ற ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ் டேக் மூலம் பணியிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிகார வர்க்கத்தினரால் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெண்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். உலகளவில் பிரபலமான இந்த ஹேஷ் டேக் இந்தியாவில் அண்மையில் பிரபலமானது.
பிரபல நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் தங்களுடன் தவறாக நடக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அவர்கள் மீ டூ மூவ்மெண்ட் எனப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மீ டூ மூவ்மெண்ட் தவறான முன்னுதாரணமாகும் என்று பாஜக எம்பி உதித் ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் மீ டூ மூவ்மெண்ட் பிரபலமாகியுள்ளது. பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் தொடர்பாகப் பேசி வருகின்றனர். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களைக் கூட சில பெண்கள் குற்றச்சாட்டுகளாக் கூறி வருகின்றனர். இதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. அவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சுமத்தக் காரணம் என்ன? இந்தக் குற்றச்சாட்டுகளால் குற்றம் சுமத்தப்பட்டவரின் சமூக அந்தஸ்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மிரட்டலுக்காக இந்த மீ டூ மூவ்மெண்ட் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. திருமணம் செய்யாமல் கணவன் - மனைவி போல வாழ்ந்துவிட்டு பின்னர்அந்த ஆண் மீதே சில பெண்கள் கற்பழிப்புக் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். இது தவறாகும் என்றார் அவர்.