புது தில்லி: கங்கை நதியை சுத்தம் செய்யக்கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அகர்வால் உயிரிழந்தார்.
கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரான ஜிடி அகர்வால் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவருக்கு 87 வயதாகிறது. 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை புதனன்று போலீஸ் ஹரிதுவாரில் இருந்து மீட்டு ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழனன்று உயிரிழந்தார். இவ்வளவு நாட்களாக வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தி வந்த அவர், தன்னுடைய கோரிக்கைகளை அரசு நிராகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது