தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த எழுத்தாளர் வின்டா நந்தா மீது நடிகர் அலோக் நாத் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை "மீ டூ' இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் உள்பட சமூகத்தில் பிரபலமாக இருக்கும் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அலோக் நாத் கடந்த 1990-ஆம் ஆண்டில் தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை தந்ததாக வின்டா நந்தா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தாரா எனும் ஹிந்தி தொலைக்காட்சி தொடர் 1990 காலகட்டத்தில் பிரபலம். அந்தத் தொடரின் கதையை எழுதியவர் வின்டா நந்தா. அந்தத் தொடரில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் அலோக் நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
அலோக் நாத்துக்கு எதிராக பாலிவுட் நடிகைகள் சந்தியா மிருதுள், தீபிகா ஆமின் ஆகியோரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் அலோக் நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வின்டா நந்தாவுக்கு எதிராக அலோக் நாத் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.