வயதுமூப்பு காரணமாக பிரபல ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் அன்னபூர்ணா தேவி (92) சனிக்கிழமை அதிகாலை காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை காலை காலமானார் என்று அன்னபூர்ணா தேவி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், மைஹர் நகரில் கடந்த 1927-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். உலகப் புகழ்பெற்ற சரோட் இசைக் கலைஞர் உஸ்தாத் அலி அக்பர் கான் இவரது சகோதரர் ஆவர். இவரது முதல் கணவர் பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர்.
மகன் சுபேந்திர சங்கர் கடந்த 1992-ஆம் ஆண்டு உயிரிழந்தார். ரவிசங்கரை விட்டு பிரிந்த பிறகு, 1982-ஆம் ஆண்டு ரூஷிகுôர் பாண்டியா என்பவரை அன்னபூர்ணா தேவி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பாண்டியா 2013-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அதன்பிறகு, இசையைப் பயிற்றுவிக்கும் பணியில் முழு மூச்சாக இறங்கினார். ஆஷிஷ் கான், அமித் பட்டாசார்யா, பகதூர் கான், வசந்த் கப்ரா, ஹரிபிரசாத் சௌரசியா, ஜோதின் பட்டாசார்யா, நிகில் பானர்ஜி உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவரையே சேரும். இதனிடையே, அன்னபூர்ணா தேவி மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.