கைலாஷ் மானசரோவர் யாத்திரை அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமென இந்தியாவுக்கான சீன தூதர் லூவோ ஜவோஹுயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாத்திரை மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் தில்லியில் சனிக்கிழமை கலந்துரையாடிய அவர் தெரிவித்ததாவது:
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் முக்கியத்துவத்தை சீனா தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. இந்த யாத்திரையானது, இந்திய-சீன நாட்டு மக்களுக்கிடையான நல்லுறவை அதிகரிக்க உதவி வருகிறது. பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவரும் இரு நாட்டுக்கான "நட்பு தூதர்'களாக விளங்கி வருகின்றனர்.
மானசரோவர் யாத்திரை அமைதியான முறையில் நடைபெற, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வூஹான் சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்-உம் உறுதி பூண்டனர். அதனை இரு நாடுகளும் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த யாத்திரையானது, அரசியலுக்கும் வெளியுறவுக் கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும். மேலும், இரு நாடுகளின் ஒத்துழைப்பு, நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் யாத்திரை அமைய வேண்டும். இன்னும் அதிக பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையே எழுந்த டோக்கா லாம் பிரச்னை காரணமாக மானசரோவர் யாத்திரை தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.