போபால்: இனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனமா செய்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். தனது பிரசாரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். செவ்வாயன்று ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது தொடர்பாக அவர் பேசியதாவது:
மோடியின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடியோ அந்த அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறார்.
இதேபோல உ.பி. பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திலும் பிரதமர் மோடி மவுனம்தான் காத்தார். மாநில முதல்வரும் வாய் மூடி இருந்தார். இருவரும் அது குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் கோஷமான 'பெண் குழந்தைகளை காப்போம், கல்வி கற்பிப்போம்' என்பதை இனி 'பா.ஜனதா அமைச்சர்களிடம் இருந்தும், எம்எல்ஏக்களிடம் இருந்தும் பெண் குழந்தைகளைக் காப்போம்' என்று மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.