திருவனந்தபுரம்: சபரிமலையின் தனித்துவத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க முயல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுளளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால், புதனன்று நடை திறக்கப்பட்ட பிறகு சபரிமலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சபரிமலையின் தனித்துவத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க முயல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுளளார்.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது
சபரிமலை ஒரு தனித்துவம் மிக்க கோயில். அனைத்த மத நம்பிக்கை கொண்டவர்களும் அந்த கோயிலுக்கு செல்ல முடியும். இதனை ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் இயக்கங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக சபரிமலையின் இந்த தனித்துவத்தை அழிக்க பலமுறை அவர்கள் முயன்றனர்.
சபரிமலை கோயிலின் பூஜை சம்பிரதாயங்கள் அனைத்தும் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கை கொண்டவர்களை தாக்குவதன் மூலம் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வன்முறையை பரப்ப முடிவு செய்துள்ளனர்.
சபரிமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜாதி மற்றும் ஆதிக்க சிந்தனை கொண்டவர்கள். இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தை அனைத்து நம்பிக்கை கொண்ட மக்களும் கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.