நவம்பர் 25-ஆம் தேதி அயோத்தி செல்வதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்தபடி உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை பாஜக கட்டவில்லை எனில் அக்கட்சியை ஆட்சியில் இருந்து மக்கள் நீக்கிவிடுவார்கள் என்று சிவசேனை கூறியுள்ளது. மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜகவால் எளிதில் கோயில் அமைக்க முடியும் என்றும், இருந்தபோதிலும், அதனைத் தாமதப்படுத்தும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாகவும் சிவசேனை தெரிவித்துள்ளது.
ஜெய் ஸ்ரீராம் என அடிக்கடி கூறும் பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. மாறாக, ராமர் கோயில் அமைக்க வலியுறுத்தி போராடும் ஹிந்து ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மிகவும் தவறான செயல். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொய்யுரைக்கும் கட்சி என்ற இழிபெயர் பாஜகவுக்கு வந்து சேரும். ஆட்சியும் பறிபோகும் என்று எச்சரித்துள்ளது.
முத்தலாக் முறையை தடை செய்ய அவசரச் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள சிவசேனை, ராமர் கோயில் கட்டும் விவகாரத்திலும் இதுபோன்று அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, ஹிந்துக்களின் உணர்வுகள் காக்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ராமர் கோயில் விவகாரத்திலும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். அதன் மூலம், நாட்டில் உள்ள ஹிந்துக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அதன் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்பு அறிவித்தது போல் நவம்பர் 25-ஆம் தேதி அயோத்தி செல்வதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஹிந்துத்துவம் இறந்துவிட்டது என்று நினைக்கும் ஒவ்வொருவரையும் நான் எச்சரிக்கிறேன். நாங்கள் இன்னும் உயிருடன் தான் உள்ளோம். ராமர் கோயில் இதுவரை அமைக்காதது எங்களுக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பு அறிவித்தது போல் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி நான் அயோத்தி செல்கிறேன் என்றார்.