லண்டன்: ரூ. 9 ஆயிரம் கோடி கடன் மீட்புக்காக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசுக் கார்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்குத் தப்பித் தலைமறைவானார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்திய அரசின் விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தரவேண்டிய கடனை மீட்க அவரது சொத்துகளைக் கைப்பற்றி ஏலம் விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் அவருடைய சொத்துகளை வாங்க பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் அவருடைய ஆறு கார்களை இங்கிலாந்தில் ஏலம் விட்டு பணம் திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த விசாரணையில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.
இதற்கான அமலாக்க உத்தரவு கடந்த வாரம் தரப்பட்ட நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் கார்களை இங்கிலாந்தில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து உயர் அமலாக்கப்பிரிவு அதிகாரி இந்த ஏல விற்பனையைச் முன்னின்று செயல்படுத்தவுள்ளதாகத் தெரிகிறது.