திருவனந்தபுரம்: பாஜகவின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் பதிலளித்துள்ளார்.
ஒரு நாள் பயணமாக கேரளாவிற்கு பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா சனிக்கிழமையன்று வந்திருந்தார். கண்ணூரில் கட்சி அலுவலக திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:
சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக போலீஸ் படையை மாநில கம்யூனிஸ்ட் அரசு பயன்படுத்துகிறது. போராட்டத்தை ஒடுக்கும் செயலில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டால்,அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். ஆட்சியைக் கூட இழக்க நேரிடும்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று செய்தியாளர்களிடம அவர் பேசியதாவது:
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசானது பாரதிய ஜனதா கட்சியின் இரக்கத்தினால் ஒன்றும் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவினால்தான் அதிகாரத்திற்கு வந்துள்ளோம்
உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த செயல்படுகிறோம் என்பதற்காக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசையே மிரட்ட பாஜக தேசியத் தலைவர் துணிந்துள்ளார்
அரசியலமைப்பு அளித்த அடிப்படை உரிமைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகத்தான் எங்களது அரசு மிரட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.