நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள பயண அட்டவணையின் காரணமாக, 2019-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தின விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கலந்து கொண்டார். அதையொட்டி இந்திய- அமெரிக்க நட்புறவின் அடையாளமாக குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்புக்கு இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அழைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும், அதில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா முன்னர் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள பயண அட்டவணையின் காரணமாக, 2019-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தின விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை என்று வெள்ளை மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் மோடியின் தோல்வியே இதற்கு காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.