புது தில்லி: இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டேவை, புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டுக்கான இந்திய - இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு தில்லியில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் இத்தாலிய பிரதமர் க்யூசெப்பே கோன்டே தலைமையிலான குழு பங்கேற்கிறது. இந்த உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே தில்லி வந்தார். பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
உச்சி மாநாடு தவிர பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையிலும் அவர் ஈடுபட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.