எனக்குக் கூடத்தான் பிரதமர் ஆக விருப்பம்; என்னால் ஆக முடியுமா? சொன்னது??

எனக்கு மோடியோ அல்லது வேறு யாரையுமோ பார்த்து எந்த பயமும் இல்லை, மக்களைப் பார்த்துத்தான் பயப்படுவேன் என்று தெலங்கானாவின் காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
எனக்குக் கூடத்தான் பிரதமர் ஆக விருப்பம்; என்னால் ஆக முடியுமா? சொன்னது??


எனக்கு மோடியோ அல்லது வேறு யாரையுமோ பார்த்து எந்த பயமும் இல்லை, மக்களைப் பார்த்துத்தான் பயப்படுவேன் என்று தெலங்கானாவின் காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை நேற்று பரிந்துரைத்தது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனிடம் அளிக்கப்பட்டது.

அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர் ராவே காபந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் நடைபெற்று வந்த நடப்பு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களில் அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல 105 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிரடியாக பதில்களை அளித்தார்.

அதில் சில கேள்விகளும், பதில்களும்..
முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவது டிஆர்எஸ்-க்கு பலனளிக்குமா?
ஏன் இல்லை? என்டிஆர் போலத்தான் டிஆர்எஸ். தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னா ரெட்டி தோல்வி அடைந்துவிட்டார். ஆனால் தெலங்கானா எனும் தனி மாநிலத்தை நான் சாதித்துள்ளேன். என்டிஆரை விடவும் நான் சிறந்தவன் என்பதை நிரூபிப்பேன்.

எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
தெலங்கானாவில் 100 தொகுதிகளை வெல்வோம். எங்கள் கட்சியின் வெற்றிக்கு அருகில் கூட யாராலும் வர முடியாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தால் கூட எங்கள் கட்சியை தோற்கடிக்க முடியாது.

நீங்கள் மோடி அலையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? அதனால்தான் முன்கூட்டியே தேர்தலுக்கு ஆயத்தமாகிறீர்களா?
இது சந்திரசேகர் ராவ். சந்திரசேகர் ராவ் மோடியைப் பார்த்தோ அல்லது வேறு யாரைப் பார்த்தும் பயப்பட மாட்டேன். மக்களுக்கு மட்டுமே பயப்படுவேன்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?
பாஜக - டிஆர்எஸ் ஜாதகங்கள் பொருந்தாது. எங்கள் கோத்திரம் வேறு, அவர்களது கோத்திரம் வேறு. 

தெலங்கானாவில் அதிக தொகுதிகளை வெல்ல பாஜக விரும்புகிறதே?
எனக்குக் கூடத்தான் பிரதமர் ஆக விருப்பம். என்னால் ஆக முடியுமா? தெலங்கானாவில் பாஜகவின் பலத்தை அனைவரும் அறிவர். பெற்ற தொகுதிகளை தக்க வைக்குமா? பாருங்கள்.

அடுத்த முதல்வர் யார்?
எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் என்று பதிலளித்தார்.

தெலங்கானா அரசியல் அரங்கில் அரங்கேறியுள்ள இந்த திடீர் திருப்பம், தேசிய அளவில் பிரதான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

தெலங்கானா புதிய மாநிலமாக உதயமான பிறகு, அங்கு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி வாகை சூடியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சந்திரசேகர் ராவ், மாநிலத்தின் முதல்வராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பதவியேற்றார்.

அவரது தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக சில ஊகத் தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது, பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே சந்திக்க சந்திரசேகர் ராவ் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது. அதுபோலவே நேற்று ஆட்சி கலைக்கப்பட்டது. மாநில அரசு மீது மக்களிடையே இருக்கும் மதிப்பு சரிவடைவதற்குள் மீண்டும் தேர்தலை நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற அவர் வியூகம் வகுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com