இந்திய-இலங்கை நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, அதன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை, திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரு நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி, இலங்கை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். இரு நாடுகளின் சட்டசபை மற்றும் உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம், மக்களுக்கிடையே நிலவும் தொடர்பையும், இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நல்லுறவு நீடித்து வருவதாகவும், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும், இரு நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டு வரும் கூட்டு பொருளாதாரத் திட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.