புது தில்லி: நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து தில்லியில் உள்ள மகளிர் ஆணையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, தில்லி மகளிர் ஆணையம், திகார் சிறைச்சாலை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், மருத்துவத் துணைப்படிப்பு படித்து வந்த மருத்துவ மாணவி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து குறிப்பிட்டுள்ளது. தாமதம் செய்யப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படியும், உயிரிழந்த தங்கள் மகளின் மரணத்துக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும் என்றும் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தூக்குத் தண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராமெடிக்கல் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.