35ஏ சட்டப்பிரிவு தொடர்பாக மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, மாநிலத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி)யின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
35ஏ சட்டப்பிரிவுக்காக ஜம்மு-காஷ்மீர் மக்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர். இந்தச் சட்டப்பிரிவின் உண்மைத்தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், இந்தச் சட்டப்பிரிவின் காரணமாக மாநிலத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடப் போவதில்லை என கட்சியின் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முஃப்தி தெரிவித்தார். ஏற்கெனவே, ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 35ஏ சட்டப்பிரிவு தொடர்பாக சாதகமான முடிவை எடுக்கும் வரை, எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை' என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.