உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பெட்ரோலிய-ரசாயன ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளா் உமேஷ் குமாா் சிங் கூறியதாவது:
நாகினா சாலையில் உள்ள மோஹித் பெட்ரோலிய-ரசாயன ஆலையில் காலை 8 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஆலையில் இருந்த கொதிகலன் ஒன்று பழுதாகி கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த கொதிகலனை சரிசெய்யும் பணியின்போது, வெல்டிங் செய்த வேளையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, இந்த விபத்தை அடுத்து ஒரு தொழிலாளி காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவா் குறித்து விசாரிப்பதுடன், ஆலையின் உரிமையாளரையும் தேடி வருகிறோம் என்றார்.