மத்தியப் பிரதேச மாநிலம், மோவ் நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தின் மீது கருப்பு மையை பூசிய காங்கிரஸார் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், மோவ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார், அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் மீது கருப்பு மையை பூசினர்.
மேலும், பெட்ரோல் நிலையத்தை வலுக்கட்டாயமாக மூட முயன்றதாகவும், அங்குள்ள பொருள்களை சேதப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர், காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பப்பு கான், அங்கித் டோலி, சௌரப் போராஸி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.
அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நாகேந்திர சிங் தெரிவித்தார்.