பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் நீண்டகாலமாக அவதிப்பட்டுவந்த குல்சூம், லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃபுக்கு கடிதம் எழுதியதாக ஜியோ'செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: பேகம் குல்சூம் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதேபோல், ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ள நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினருக்கு உரிய மன திடத்தை அளிக்கவும் பிரார்த்திக்கிறேன். பேகம் குல்சூமை சந்தித்து உரையாடிய பொழுதுகள் என்றும் நினைவில் நிற்பவை என்று அந்த இரங்கல் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீஃபின் பிறந்த தினம் மற்றும் அவரது பேத்தியின் திருமண நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டபோது உரையாடியதை மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.