கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக தலைவர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள். இது பாஜகவினரின் பகல் கனவாகும். பாஜகவினரின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது.
காங்கிரஸ் கட்சியில் ஜார்கிஹோளி சகோதரர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், இதுகுறித்து ஜார்கிஹோளி சகோதரர்களிடம் விசாரித்தறிவேன்.
கர்நாடகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. ஜார்கிஹோளி சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு, இப் பிரச்னைக்குத் தீர்வு காண்பேன். ஜார்கிஹோளி சகோதரர்கள் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள். எனவே, அவர்களால் கட்சிக்குத் தொந்தரவு என்று கூறுவதை ஏற்க முடியாது.
இதனால் காங்கிரஸில் ஏதாவது பிரச்னைகள், குழப்பங்கள் இருந்தால் ஜார்கிஹோளி சகோதரர்களுடன் கலந்தாலோசிப்பேன். எனவே, இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன் என்றார்.