விஜய் மல்லையா மீதான லுக் அவுட் நோட்டீஸை பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ அதனை வலுவிழக்கச் செய்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டன் செல்வதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவித்ததில் இருந்து கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பாஜக-வினர் ஒருவரை ஒருவர் மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) சுட்டுரையில் தெரிவித்ததாவது,
"மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த கைது நோட்டீஸை, தகவல் தெரிவித்தால் போதும் என்று சிபிஐ சத்தமில்லாமல் வலுவிழக்கச் செய்ததே அவர் தப்பித்துச் செல்வதற்கு உதவியது. சிபிஐ தங்களது அறிக்கையை பிரதமரிடமே நேரடியாக சமர்பிப்பார்கள். மிகப் பெரிய சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸை மாற்றியிருக்கும் என்பது நம்பும்படியாக இல்லை" என்றார்.
ஆனால், விஜய் மல்லையா விவகாரத்தில் சில தவறான முடிவுகளை எடுத்ததாக சிபிஐ வட்டாரங்கள் வியாழக்கிழமை விளக்கம் தெரிவித்தனர்.