அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, என் வாக்குச்சாவடி வலிமையானது' என்பதே பாஜக தொண்டர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கிராமப்புற ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்), நவாடா(பிகார்), காஜியாபாத்(உத்தரப் பிரதேசம்), ஹஜாரிபாக்(ஜார்கண்ட்), மேற்கு அருணாசல்(அருணாசலப் பிரதேசம்) ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் நமோ செயலி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜகவின் மிகப் பெரும் பலமே அதன் தொண்டர்கள் தான். அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவே, இத்தகைய குறுகிய கால இடைவெளியில் பாஜக மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
அந்தந்த வாக்குச்சாவடிகளில் கவனம் செலுத்தும் தொண்டர்களின் சாமர்த்தியத்தினாலே, இன்று பாஜக இத்தனை பலம் கொண்டு விளங்குகிறது. அத்தகைய தொண்டர்களின் துணையோடு, அடுத்த ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தொண்டர்கள் அவரவர் தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். என் வாக்குச்சாவடி வலிமையானது' என்பது ஒன்றே நம் தாரக மந்திரம். அதுவே நம் வலிமை.
பாஜகவின் பக்கம் தொடர்ந்து காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் காற்றில் அடித்துச் செல்லப் படாமல், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவே, எதிர்க்கட்சிகள் கைகோத்து நின்று கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களையே செய்து வருகின்றன. ஆனால், மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் தூக்கக் கலக்கத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று மோடி தெரிவித்தார்.