சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார்.
தெலங்கானாவுக்கு வருகை தரும் அமித் ஷா, ஹைதராபாத்தில் மகா காளி அம்மன் கோயிலில் பிற்பகலில் வழிபாடு செய்கிறார். அதைத் தொடர்ந்து, மஹபூப்நகரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். அதன் பிறகு, கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கிறார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா பேசியதாவது:
ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை ஆதரித்த சந்திரசேகர ராவ், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் என இருவேறு தேர்தல்களின் செலவு இந்த ஒரு சிறிய மாநிலத்தின் நிதிச்சுமையாகி உள்ளது. இதனால் நான் அவரைப் பார்த்து ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். அது, இவ்வளவு பெரிய நிதிச்சுமையை ஏன் தெலங்கானா மக்கள் மீது திணிக்கிறீர்கள்?
தெலங்கானா மாநிலத்தின் 119 இடங்களிலும் பாஜக போட்டியிட்டு மிகப்பெரும் சக்தியாக இங்கு உருவெடுக்கும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மதத்துக்கென இடஒதுக்கீடு வழங்க இயலாது. அப்படி இருக்கும்போது சிறுபான்மையினருக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் ஆதாயம் ஆகாதா?
இடஒதுக்கீடு வழங்கிய அதே அரசு மீண்டும் பதவியேற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் வாக்கு வங்கி அரசியல் தொடரும் என்று தெரிவித்தார்.