தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே, காதல் கணவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்கொண்டா மாவட்டம் ஜோதி மருத்துவமனை வளாகத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. பிரனாய் பெருமல்லா என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்படும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த காட்சியில், பிரனாய் மற்றும் அவரது மனைவி அம்ருதா, பிரனாயின் சகோதரியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி நடந்து செல்கின்றனர். அவர்கள் பின்னால் ஒருவர் நெருக்கமாக நடந்து செல்கிறார். அவர்கள் நுழைவாயிலை கடக்கும் போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்துக்குப் பின்னால் பிரனாயை தள்ளிய மர்ம நபர், தன் கையில் இருந்த பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பிரனாய் துடிதுடித்து உயிரிழந்தார்.
சில நொடிகளில் என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத அம்ருதாவும் அந்த பெண்ணும், உதவி கேட்டு மருத்துவமனையை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், சம்பவ இடத்திலேயே பிரனாய் மரணம் அடைந்தார்.
மருத்துவமனைக்கு ஓடிய போது அம்ருதா மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரனாய் மரணம் அடைந்தது அவருக்குத் தெரிவிக்கப்படாமல் தொடர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், பிரனாய் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அம்ருதா வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிக்கும் போது இருவரும் காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு அம்ருதா பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அம்ருதாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருமணம் முடிந்த நாள் முதல், தன் பெண்ணிடம் இருந்து பிரிந்து செல்லுமாறு அம்ருதாவின் தந்தையும், சித்தப்பாவும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இந்த சூழ்நிலையில் இந்த படுகொலை நடந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.