பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட்டில் சிரோமணி அகாலி தளம் கட்சி ஞாயிற்றுகிழமை பேரணி நடத்த பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.
நீதிபதி ஆர்.கே.ஜெயின் தலைமையிலான அமர்வு, பேரணியின் போது எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போதிய பாதுகாப்புகளை அளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, சிரோமணி அகாலிதளம் சார்பில் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் பிறகு பேரணிக்கு அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி அக்கட்சியினர் உயர் நீதிமன்றத்தை வெள்ளிக்கிழமை அணுகியது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் தமன்பீர் சிங் சோதி கூறுகையில், 'சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவகையில் பேரணி நடத்த அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.