ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி முதல், நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி முதல், நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 இந்த அறிவிப்பை வெளியிட்டு, ஸ்ரீநகரில் மாநில தேர்தல் ஆணையர் ஷலீன் கப்ரா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 ஜம்மு-காஷ்மீரில் முதலில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். பிறகு, ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
 இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. புலம் பெயர்ந்து வசிப்பவர்கள், தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 நகர உள்ளாட்சித் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்தல், அக்டோபர் 10-ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல், அக்டோபர் 13-ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் அக்டோபர் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
 அனைத்து கட்டத் தேர்தலிலும், வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 20-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இந்த விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 மாநிலத்தில் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இரு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 79 நகராட்சி அமைப்புகள் உள்ளன. இந்த நகராட்சி அமைப்புகளில் மொத்தம் 1,145 வார்டுகள் உள்ளன. ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி, பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று ஷலீன் கப்ரா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com