அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலிலும், அகில இந்திய மஜ்லீஸ்-ஏ-இத்தேஹத்-உல் முஸ்லிமீன் கட்சியும், பாரிபா பகுஜன் மகாசங் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் தெரிவத்துள்ளனர்.
இது குறித்து மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரிபா கட்சித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர்ஜியை சனிக்கிழமை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இதில், வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஒன்றாக இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. சுதந்திரம் பெற்று 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், மகாராஷ்டிர முஸ்லிம்களுக்கும், தலித் மக்களுக்கும் அரசியலில் போதுமான அளவு பிரதிநிதித்துவமும், அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இந்த மக்களை வாக்கு வங்கியாகவே அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றவே, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.