வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
மோடி அரசின் பல்வேறு கொள்கைகள் பாராட்டக்கூடியவை. அதே நேரத்தில், சில தவறுகளை தற்போது திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி அதிகரிப்பு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை சரி செய்ய மோடி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
நான் தேசியவாதத்தில் மீது மிகுந்த பற்று கொண்டவன். நான் வலதுசாரியோ அல்லது இடதுசாரியோ கிடையாது. இரண்டுக்கும் பொதுவான நபர் ஆவேன். பல்வேறு விவகாரங்களிலும் கருத்துகளை தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறேன்.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் வரும் தேர்தலில் பிரசாரம் செய்ய மாட்டேன். நான் ஏன் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்? அரசியலில் இருந்து நான் விலகி விட்டேன். அனைத்து கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். நான் சுதந்திரமான நபர் ஆவேன்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதற்கு உரிமைகள் உள்ளது. அதேநேரத்தில், தூய்மை இந்தியா திட்டம் போன்ற நல்ல பணிகளையும் அவர் செய்துள்ளார். தனது ஆட்சியில் முக்கிய ஊழல் எதுவும் நடைபெறாமல் பார்த்து கொண்டார்.
ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதை ஜிஎஸ்டி வரி விகிதத்தில், மிகவும் குறைவான விகிதத்தில் பட்டியலிட வேண்டும். ஏனெனில், மக்களிடம் இனிமேல் கூடுதல் கட்டணம் செலுத்த பணம் இல்லை.
பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் தடைப்படுவதால், நாடு செயல்படுவது நின்று விடாது. வருவாய் திரட்டுவதற்கு வசதி படைத்தவர்கள் மீது அரசு அதிக வரி விதிக்க வேண்டும். சில பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முன்வைத்து, உலகில் பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகராக இந்தியா திகழ்வதாக கூறப்படுவது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். இத்தகைய குற்றத்தை தடுக்க யோகா உதவும் என்றார் ராம்தேவ்.
2014ஆம் ஆண்டு தேர்தலில் வைத்திருந்தது போல், பிரதமர் மோடியின் மீது தற்போதும் நம்பிக்கை உள்ளதா? என ராம்தேவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.