பனாஜி: மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்களை மிரட்டுகிறார் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீது காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
முற்றிய நிலையில் உள்ள கணைய புற்றுநோயால் அவதிபட்டுவரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தற்போது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முன்னதாக இதன் காரணமாக அவருக்கு கோவா, மும்பை மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.
அவரது உடல்நிலை காரணமாக பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் அரசுக்கு ஆதரவளிக்கும் சுயேட்சைகள் இடையே மாநில அரசில் அதிக அளவில் அதிகாரப் பிரதிநிதித்துவம் கேட்டு ஒரு இறுக்கமான சூழல் நிலவுகிறது.
அதேசமயம் பாரிக்கருக்கு முன்னதாக 2014 - 2017 காலகட்டத்தில் கோவா முதல்வராக இருந்த லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மீது சட்டவிரோதமாக சுரங்க ஒதுக்கீடு செய்ததில் ரூ. 1.44 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அம்மாநில லோக் ஆயுக்தா மூலமாக விசாரணை நடந்து வருகிறது.
அந்த விசாரணையில் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு முன்பு முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் அரசு வகுத்த கொள்கை முடிவின் படியே சுரங்க ஒதுக்கீடுகள் புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவும் பாரிக்கரின் மீதான அழுத்தங்கள் அதிகமாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மருத்துவமனையில் இருந்து பாரிக்கர் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், நிர்வாக விபரங்கள் குறித்து விவாதித்ததாகவும் செய்தியாளர்களிடம் வியாழனன்று தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்களை மிரட்டுகிறார் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீது காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
இதுதொடர்பாக கோவா மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் செல்லக்குமார் கூறியதாவது
ஆம்.அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில் குணம்பெறுவார் என்று நமபுகிறேன். அவர் நலம் பெறவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து கொண்டே சில நபர்களை போனில் அழைத்து மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன.
தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபணம் ஆனால் அவர் தனது சொத்துக்களை துறப்பதாக உறுதியளிக்க வேண்டும். இதுவரை அவர் பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். புகார் செய்துள்ளார். அதிகபட்சமாக சிலரது சொத்துக்களை பறிமுதலும் செய்துள்ளீர்கள். தற்போது இதுஉங்களது முறை.
பாஜக அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள கூட்டணி எம்.எல்.எக்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் ஆட்சியமைப்பது குறித்து நாங்கள் அவசரப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.