போபால்: மத்திய பிரதேச மாநிலத்தை அதிரச் செய்த 'வியாபம் முறைகேடு' தொடர்பாக காங்கிரசின் மூன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தொழில் கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், அரசு பணிகளுக்கான தேர்வுகளை அந்த மாநில தொழில் கல்வி வாரியம் (வியாபம்) நடத்தி வருகிறது. நுழைவுத் தேர்வு மற்றும் பணி நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக, முதலில் சிறப்பு அதிரடிப் படை விசாரணை நடத்தி வந்தது. பின்னர், இந்த முறைகேடுகளை விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு, சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் செüஹானுக்கு சிபிஐ நற்சான்று வழங்கி விட்டது.
வியாபம் முறைகேட்டில் சிவராஜ் சிங் செளஹானுக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரசின் திக்விஜய் சிங் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த பொழுது, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் சிங் முன்னிலையில் திக்விஜய் சிங் நேரில் ஆஜாராகி சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அப்போது சிவராஜ் சிங் செஹான், மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் 'வியாபம் முறைகேடு' தொடர்பாக திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரசின் மூன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வியாபம் முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக திக்விஜய் சிங், கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செயல்பாட்டாளர் பிரசாந்த் பாண்டே ஆகியோர் மீது, பாஜகவினைச் சேர்ந்த வழக்குரைஞர் குழு ஒன்று மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவினை வியாழனன்று விசாரித்த நீதிபதி சுரேஷ் சிங், திக்விஜய் சிங் உள்ளிட்ட நால்வர் மீதும் முதல் தகவல அறிக்கை பதிவு செய்யுமாறு ஷ்யாமளா ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதோடு, இதுதொடர்பாக விரிவான அறிக்கையினை வரும் நவம்பர் 13-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.