புது தில்லி: மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா உச்ச நீதிமன்றம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வெள்ளிக்கிழமையன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்துப்படி அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட உரிமையுண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா உச்ச நீதிமன்றம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சபரிமலை கோயிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிட்டுள்ளதன் மூலம் பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்குமா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.